காவிரி ஹைட்ரோ கார்பன் பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் – அன்புமணி ராமதாஸ்
காவிரி, ஹைட்ரோ கார்பன் பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்திற்கு பச்சை துரோகம் செய்து வருகிறது என திருச்சியில் அன்புமணிராமதாஸ் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நடைபெற்று வரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பா.ம.க. மாநில இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்றிரவு திருச்சி வந்தார். இன்று காலை அவர் நெடுவாசலுக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மீத்தேன் , ஹைட்ரோ கார்பன் இரண்டுமே ஒன்றுதான். தமிழகத்தின் வளர்ச்சிகளை சுரண்டி , பாலைவனமாக்கவே மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். காவிரி பிரச்சனை, ஹைட்ரோ கார்பன் பிரச்சனை ஆகிய பிரச்சனைகளில் மத்திய அரசு தமிழகத்திற்கு பச்சை துரோகம் செய்து வருகிறது.
தமிழகத்தில் 9 லட்சம் மாணவர்கள் சமச்சீர் கல்வி முறையை பின்பற்றுகின்றனர். இதில் மத்திய அரசு இந்தி, சமஸ்கிருதம் மொழிகளை திணிக்க நினைக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.




