ஆர்.கே.நகரில் ஜெ.தீபா போட்டி இன்று மாலை அறிவிக்கிறார்
மறைந்த ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவேன் என்று அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியுடன் சேர்ந்து அவர் அரசியலில் ஈடுபடுவார். அந்த அணி பலமான அணியாக உருவெடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கி தீபா தனியாக செயல்பட்டு வருகிறார்.
கடந்த மாதம் 24-ந்தேதி ஜெயலலிதா பிறந்த நாளில் தீவிர அரசியலில் குதித்த தீபா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவேன் என்று அறிவித்தார்.
இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் ஆர்.கே.நகரில் போட்டியிடுவது பற்றி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது ஆர்.கே.நகரில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்படும் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
அ.தி.மு.க.வில் இருந்து வேட்பாளர் அறிவிப்பதற்குள் தான் போட்டியிடுவதை அறிவிக்க தீபா திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.




