Tuesday , June 10 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / ஓ.பன்னீர்செல்வம் சிரித்ததுதான் காரணம் – சசிகலாவை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் காட்டம்

ஓ.பன்னீர்செல்வம் சிரித்ததுதான் காரணம் – சசிகலாவை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் காட்டம்

ஓ.பன்னீர்செல்வம் சிரித்ததுதான் காரணம் – சசிகலாவை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் காட்டம்

“அதிமுகவுக்குள் நிலவும் காட்சிகளுக்கு, என்னைப் பார்த்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிரித்ததுதான் காரணம் என்று கூறுவது விசித்திரமானது, வெட்கக் கேடானது” என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் காட்டமாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “எதிர்கட்சி தலைவரைப் பார்த்து முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்” என்று அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன் குற்றம் சாட்டியிருப்பது உதவாக்கரை வாதம் போன்று இருக்கிறது. நினைத்த வேகத்தில், குறுக்கு வழியில் முதல்வர் ஆக முடியவில்லை என்ற ஏக்கத்தில் ‘எதைத் தின்னால் பித்தம் தெளியும்’ என்ற போக்கில் தி.மு.க. மீது போலி விமர்சனத்தை வைத்துள்ளதாகவே கருதுகிறேன். அதிமுகவிற்குள் நடக்கும் கேலிக் கூத்துகளுக்கும், அரசியல் கோமாளித்தனங்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை சசிகலா நடராஜன் அறிய வேண்டும் என்றால் அவர் முதலில் “தமிழக அரசியலை” புரிந்துகொள்ள வேண்டும்.

ஆளுநரால் நியமிக்கப்பட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை போயஸ் தோட்டத்திற்கு வர வைத்து, இரண்டு மணி நேரம் மிரட்டி, ராஜினாமா கடிதம் பெற்ற சசிகலா நடராஜன், அதிமுக தொண்டர்களின் கோபத்திலிருந்து தப்பிக்க இப்படி தி.மு.க. மீது பழி போடுவது அரைவேக்காட்டுத்தன அரசியல்.

திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரை சட்டமன்றத்தில் ஆக்கபூர்வமான எதிர்கட்சியாகவும், வெளியில் அரசியல் நாகரிகத்தை கடைப்பிடிக்கும் கட்சியாகவும் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால்தான் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற போது அந்த நிகழ்ச்சியில் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் பங்கேற்றேன். அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். அன்று முதல்வராக இருந்த ஜெயலலிதாவே அதற்காக எனக்கு நன்றி தெரிவித்ததை தோழி என்று சொல்லிக் கொள்ளும் சசிகலா நடராஜனுக்கு தெரியாமல் இருப்பது எப்படி?

ஏன் சட்டமன்றத்திலேயே நேருக்கு நேர் நானும் முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் பரஸ்பரம் வணக்கம் செலுத்தி சிரித்துக் கொண்டிருக்கிறோம். ஜெயலலிதாவைப் பார்த்து சசிகலா நடராஜன் இப்படியொரு கேள்வியை கேட்டிருக்க முடியுமா?

ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டவுடன் அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தது, அவர் திடீரென மறைந்தவுடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியது, ஜெயலலிதாவின் உடலின் அருகில் இருந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் கூறியது எல்லாமே திராவிட முன்னேற்றக் கழகம் கடைப்பிடிக்கும் அரசியல் நாகரிகத்தின் வெளிப்பாடு மட்டுமே.

அவர் முதல்வராக தேர்வு செய்யப்பட்டு பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகும், அதே அரசியல் நாகரிகத்தை சட்டமன்றத்திலும், வெளியிலும் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்துச் சென்றது. ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் தமிழக நலனுக்காக இணைந்து செயல்படுவது ஒருவேளை சசிகலா நடராஜனுக்கு பிடிக்காமல் போயிருக்கலாம். அதற்கு தி.மு.க. பொறுப்பாக முடியாது. ஆகவே அதிமுகவுக்குள் “சிரிப்பாய் சிரிக்கும் காட்சிகளுக்கு” என்னைப் பார்த்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சிரித்ததுதான் காரணம் என்று கூறுவது விசித்திரமானது, வெட்கக் கேடானது. அதை விட தனது எடுபிடியாக இருக்கும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பித்துரை மூலமாக ஒரு பேட்டி கொடுக்க வைத்து, டெல்லி பயணம் என்றெல்லாம் கதை அளப்பது “மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும்” கேவலமான செயல் என்பதை சசிகலா நடராஜன் உணர வேண்டும்.

முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்ற பிறகு அவர் பட்ட அவமானங்களை மறைந்த ஜெயலலிதா சமாதி முன்பு நின்று பட்டியலிட்டிருக்கிறார். திராணி இருந்தால் அதற்கு திருப்பி பதில் சொல்லுங்கள். அதை விட்டு விட்டு தி.மு.க.வை சீந்த வேண்டாம் என்று சசிகலா நடராஜனை எச்சரிக்க விரும்புகிறேன். அமைச்சர்களை வைத்து, நாடாளுமன்ற துணை சபாநாயகரை வைத்து, அதிகாரபூர்வ ஏடான “நமது எம்.ஜி.ஆர்” இதழை வைத்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை அவமானப்படுத்தியது சசிகலா நடராஜனும் அவருடைய குடும்ப உறுப்பினர்களும் தானே தவிர தி.மு.க. இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அதிமுகவில் உள்ள மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டிய சசிகலா நடராஜனும் அவரது குடும்பத்தினரும் இப்போது முதல்வரையே மிரட்டி கடிதம் வாங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. குறிப்பாக குடியரசு தின விழாவில் தனது மனைவியுடன் வந்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்றதை பொறுத்துக் கொள்ள முடியாத சசிகலா நடராஜன், முதல்வரை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்துள்ளார் என்பதுதான் உண்மை. ஆனால் அந்தக் கடிதத்தை ஆளுநர் ஏற்றுக் கொண்டு விட்ட நிலையில், இன்றைக்கு மாநிலத்தில் மிகப்பெரிய நிர்வாக சீர்குலைவு ஏற்பட்டு நிலைத்த ஆட்சியின் சக்கரம் தடுமாறி நிற்கிறது.

இன்றைக்கு முதல்வரையே மிரட்டியிருக்கின்ற நிலையில், இந்த மிரட்டல் குறித்தும், போயஸ் கார்டனில் அமர்ந்து கொண்டு நிலைத்த ஆட்சியை கவிழ்க்க சதி செய்த அனைவர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் ஏற்கெனவே கூறியிருந்ததை மீண்டும் வலியுறுத்துகிறேன். முதல்வரே மிரட்டப்பட்டிருப்பதால் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுப்பதை விட இது குறித்து சி.பி.ஐ. நடவடிக்கைக்கு ஆளுநர் உத்தரவிடவேண்டும்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு மூன்று மாதங்கள், தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதாவின் உடல் நிலை பாதிப்பால் இரண்டரை மாதங்கள், அவர் மறைந்த பிறகு செயல்பட விடாத முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அரசால் இரண்டரை மாதங்கள் என்று ஏறக்குறைய எட்டு மாதங்களுக்கு மேல் தமிழக அரசு நிர்வாகம் முழுவதும் செத்து விட்டது. நிர்வாக எந்திரம் நிலைகுலைந்து கிடக்கிறது. ஆகவே அசாதாரண சூழ்நிலை நிலவும் இந்த நேரத்தில் பொறுப்பு ஆளுநர் உடனடியாக சென்னைக்கு வந்து முகாமிட்டு, தமிழக நலனை பாதுகாக்க நிலையான ஆட்சி அமைவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு, அரசியல் சட்டத்தை தமிழகத்தில் செயல்பட வைக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …