அ.தி.மு.க. – தி.மு.க. ஊழல் கட்சிகள் – பொன். ராதாகிருஷ்ணன்
அ.தி.மு.க. – தி.மு.க. ஊழல் கட்சிகள் என மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசியல் சூழலில் ஆளுநர் பொறுப்பாகி செயல்பட்டு வருகிறார். இதைவிட ஆளுநர் திறம்பட செயல்பட முடியாது. தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளில் திராவிட கட்சிகள் ஆட்சி செய்து அழித்து விட்டன. அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்து ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்டு தற்போது முடித்து வைக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் தி.மு.க. அண்ணாவால் தொடங்கப்பட்டு கருணாநிதியால் வழிநடத்தப்பட்டு முடித்து வைக்கப்பட்டு உள்ளது. தமிழத்தில் புதிய தேடல் ஆரம்பித்துள்ளது. அ.தி.மு.க. – தி.மு.க. ஊழல் கட்சிகள். இதைவிட எடுத்துக்காட்டாக சொல்ல முடியாது.
எம்.எல்.ஏ.க்களை விடுதிகளில் அடைத்து வைத்திருப்பது கேவலமான செயல். அவர்களை சுதந்திரமாக செயல்பட வைக்க வேண்டும்.
தமிழகத்துக்கு நன்மை செய்ய முடியும் என்றும், ஊழலற்ற ஆட்சியை கொடுக்க முடியும் என்று உறுதி கூறுகிறவர்கள் ஆட்சி பொறுப்பை ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.




