விவசாயிகளுக்கு ஆதரவான முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றதையடுத்து தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைகள் நிறைவேறும்வரை ஒன்றிணைந்து போராடுவோம் என்று தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்,.
தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மத்திய மாநில அரசுகளால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் விவசாயப் பெருங்குடி மக்களை பாதுகாத்து அவர்களின் உரிமைகளை மீட்க வேண்டும் என்ற பொதுநல நோக்கத்தில் நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் மூலம் தி.மு.க. முன்னெடுத்த முழு அடைப்புப் போராட்டம் அனைத்து கட்சித் துணையுடனும், பலதரப்பு மக்களின் ஆதரவுடனும், தொண்டர்கள் மற்றும் நம்முடன் தோள் நிற்கும் கட்சிகளின் தொண்டர்களின் பங்களிப்புடனும் மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது.
தமிழகத்தில் ஏறத்தாழ 65 லட்சம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோ ஷேர் ஆட்டோ மினி பஸ் தனியார் பேருந்துகள் உள்ளிட்டவை இயங்கவில்லை. தனியார் நிறுவனங்கள் பலவும் மூடப்பட்டிருந்தன. அரசுப் பேருந்துகள் கூட குறைந்த அளவில் இயங்கின. அதிலும் கூட பயணிகள் எண்ணிக்கை குறைவே. தலைநகரமான சென்னை, தமிழ் நகரமான மதுரை, பின்னலாடை தொழில் சிறந்துள்ள திருப்பூர், நூற்பாலைகள் நிறைந்த கோவை மற்றும் திருச்சி, நெல்லை, சேலம், வேலூர் என அனைத்து நகரங்களிலும் முழு அடைப்புப் போராட்டத்தின் முழுமையான வெற்றியைக் காண முடிந்தது.
டெல்லியில் 40 நாட்களுக்கு மேல் தங்கள் அவல நிலையை விளக்கும் பல்வேறு வகையானப் போராட்டங்களை நடத்தியும், பிரதமரை சந்திக்க முடியாமலும் மத்திய அரசின் உறுதிமொழியைப் பெறமுடியாமலும் சென்னை திரும்பிய அய்யாகண்ணு தலைமையிலான விவசாயிகள், எழும்பூர் ரயில் நிலையத்திலேயே நம்முடைய முழுஅடைப்புப் போராட்டத்தில் பங்கேற்று, இந்தப் போராட்டம் யாருக்கானது என்ற உண்மை நிலையை மத்திய, மாநில அரசுகளுக்கும், இதனை வெறும் அரசியல் கண்ணோட்டத்துடன் மட்டுமே பார்ப்பவர்களுக்கும் உணர்த்தியிருக்கிறார்.
மக்களின் பேராதரவுடன் முழு அடைப்புப் போராட்டம் மகத்தான வெற்றி பெற்ற அதே நாளில், கழகத்தின் சார்பில், நெடுஞ்சாலைகளை வரைமாற்றம் செய்து டாஸ்மாக் கடைகளைத் திறக்க நினைக்கும் மாநில அரசின் திட்டத்திற்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், “நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மது பானக்கடைகளை 3 மாதங்களுக்குத் திறக்கக் கூடாது” என்ற தடை உத்தரவு பிறக்கப்பட்டிருப்பது இந்தப் போராட்ட நோக்கங்களில் ஒன்றுக்கு கிடைத்துள்ள சட்டப்பூர்வமான வெற்றியாகும்.
வெற்றிப் பெறவேண்டிய கோரிக்கைகள் நிறைந்துள்ளன. அந்தக் கோரிக்கைகள் அனைத்தும் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்குமானவை. மக்கள் நலன் காக்க தி.மு.க.வும் தோழமைக் கட்சிகளும் ஒருங்கிணைந்துள்ளன. மத்திய- மாநில அரசுகளின் வாயிலாக இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை நம்முடைய அடுத்தடுத்த போராட்ட வழிமுறைகள் ஜனநாயக நெறிப்படி தொடரும். மக்கள் நலன் காக்க ஒன்றிணைந்து போராடுவோம். அரசாங்கம் செவிசாய்க்கா விட்டால் ஆட்சி மாற்றத்தை உருவாக்குவோம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.