Tuesday , June 10 2025
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைப்பதற்கான முயற்சி வரும் திங்கட்கிழமை பேச்சு தொடக்கம்

அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைப்பதற்கான முயற்சி வரும் திங்கட்கிழமை பேச்சு தொடக்கம்

அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைப்பதற்கான முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இரு அணியிலும் தலா 7 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரு அணி குழுவினரும் வருகிற 24-ந்தேதி பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளனர்.

அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைப்பதற்கான முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இரு அணியிலும் தலா 7 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஓ.பி.எஸ். அணியில் கே.பி. முனுசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விசுவநாதன், மைத்ரேயன் எம்.பி., பாண்டியராஜன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள்.

சசிகலா அணி தரப்பில் வைத்திலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண் முகம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இரு அணி குழுவினரும் வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளனர்.

இதற்கிடையில் பேச்சுவார்த்தையில் பேச வேண்டிய அம்சங்கள் பற்றி இரு அணியினருமே ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவும், துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து டி.டி.வி. தினகரனும் ராஜினாமா செய்து கடிதம் கொடுக்க வேண்டும்.

பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர் என்று தேர்தல் கமி‌ஷனில் கொடுக்கப்பட்டுள்ள பிரமாண வாக்குமூலங்களை வாபஸ் பெற வேண்டும்.

ஜெயலலிதா மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என்ற 3 நிபந்தனையை ஓ.பன்னீர் செல்வம் விதித்துள்ளார்.

ஆனால் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என்று சசிகலா தரப்பினர் கூறி உள்ளனர்.

இதற்கிடையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று நள்ளிரவில் தினகரன் அணியினர் கூடி ஆலோசித்தனர்.

அப்போது, நிபந்தனைகள் பற்றி பேச வேண்டாம். முதலில் இரு அணிகளும் சுமூகமாக இணைவோம். அதன்பிறகு நிபந்தனைகள் பற்றி பேசுவோம் என்று முடிவு செய்ததாக தெரிய வந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் தான் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை தொடங்குகிறது. நிபந்தனைகளை தளர்த்தினால் மட்டுமே தீர்வு எட்டும் சூழ்நிலை உருவாகும் என்று மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

சசிகலா தரப்பை சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

ஓ.பன்னீர்செல்வமும் இருந்துதான் சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்தார். இப்போது உடனே அவரை நீக்க வேண்டும் என்பது சாத்தியமில்லை. அவர் ராஜினாமா கடிதம் கொடுத்தால் கூட அதை ஏற்பதும், ஏற்காததும் பொதுக்குழுவின் முடிவு. எனவே இந்த வி‌ஷயத்தில் பிடிவாதம் பிடிப்பது நல்லதல்ல.

அடுத்து கட்சியின் பொதுச்செயலாளராக ஓ.பி.எஸ்சை நியமித்தால் எங்கள் தரப்பினர் புறக்கணிக்கப்படுவார்கள் என்ற பயமும் தொண்டர்களிடம் இருக்கிறது.

எனவே இணைப்பு என்பது இரு அணியினரும் அமர்ந்து மனம் விட்டு பேசினால்தான் முடிவுக்கு வரும். இரு அணியும் ஒன்றாக இணைய வேண்டும். இரட்டை இலையை காக்க வேண்டும் என்பது எல்லோரது விருப்பம். அதை கருத்தில் கொண்டு இரு தரப்பும் விட்டுக் கொடுத்து பேசினால்தான் சுமூகநிலை ஏற்படும் என்றார்.

ஓ.பி.எஸ்.தரப்பை சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

எங்களை பொறுத்தவரை உறுதியாக இருக்கிறோம். சசிகலாவை எதிர்த்தும், ஜெயலலிதா மரணத்தின் மர்மம் வெளியே வர வேண்டும் என்றுதான் வெளியே வந்தோம். அதில் இருந்து நாங்கள் பின்வாங்க முடியாது என்றார்.

இந்த இழுபறி நிலவுவதால் பேச்சுவார்த்தை நாளை மறுநாள் தொடங்கினாலும் முடிவை எட்ட சில நாட்கள் ஆகலாம் என்றே தெரிகிறது.

தற்போதைய சூழ்நிலையில் முதல்வர் பதவி என்பது சிக்கல் நிறைந்தது. எனவே கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பை பெறுவது என்ற முடிவில் ஓ.பி.எஸ். அணியினர் இருக்கிறார்கள்.

இருதரப்பும் தங்கள் எண்ணங்களுக்கு பட்டை தீட்டிக்கொண்டு நாளை மறுநாள் சந்திக்கிறார்கள். சந்திக்கும் வேளை என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …