பாடசாலையை புறக்கணித்து மண்ணுக்கான போராட்டத்தில் கைகோர்த்தனர் புதுக்குடியிருப்பு மாணவர்கள்
நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவாக, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் உயர்தர மாணவர்கள் பாடசாலையை புறக்கணித்து மக்களுடன் கைகோர்த்துள்ளனர்.
தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவாகவும், தமது காணிகளை மீள கையளிக்குமாறும் வலிறுத்தி இம்மக்கள் கடந்த 14 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதோடு, தமது சத்தியாக்கிரக போராட்டத்தை கடந்த மூன்று நாட்களாக சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டமாக மாற்றியுள்ளனர்.
இவர்களுக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருவதோடு, இன்றைய தினம் (வியாழக்கிழமை) தமது கல்வி நடவடிக்கைகளை புறக்கணித்து இம் மாணவர்களும் மக்களுடன் இணைந்து போராடி வருகின்றனர்.
கேப்பாப்பிலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் குறித்து இதுவரை உறுதியான தீர்வேதும் வழங்கப்படாத நிலையில், வடக்கு மாகாணம் தழுவிய போராட்டமாக இதனை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.