தாயக மக்களின் மண்மீட்பு போராட்டத்திற்கு மன்னார் பிரஜைகள் குழு ஆதரவு
படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு-பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் நடைபெற்று வரும் சத்தியாக்கிரக போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு முழுமையான ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
கடந்த கால யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், அனாதைகளாக்கப்பட்டிருக்கும் பாடசாலை சிறார்கள் தமது உரிமைகளை பறிகொடுத்த நிலையில் இன்று நடுத்தெருவில் நிர்க்கதியாகியுள்ள நிலையில், இம்மக்களின் போராட்டம் வெற்றிபெற்று அவர்களுக்கான முழுமையான உரிமைகள் கிடைக்க வேண்டுமென மன்னார் பிரஜைகள் குழு வலியுறுத்தியுள்ளது.
தமது பூர்வீக நிலத்தை கையளிக்குமாறு வலியுறுத்தி கேப்பாப்பிலவு-புதுக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்று 10 நாட்களை எட்டியுள்ளது. அத்தோடு, அவர்களுக்கு ஆதரவாக புதுக்குடியிருப்பில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 6 நாட்களை எட்டியுள்ளது. தமது காணிகளை மீள கையளிக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் மக்கள் உள்ள நிலையில், பிரதமர் அலுவலகத்தில் இதுகுறித்து இன்று காலை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.