19வது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்கி புதிய திருத்தத்தை உருவாக்குவதே எமது நோக்கம்
பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை நீக்கி நாட்டுக்கு பொருத்தமான முறையில் அரசியலமைப்பு திருத்தத்தை உருவாக்கவே புதிய பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கோருகின்றோம். நிறைவேற்று துறையினை பலவீனப்படுத்தவே 19வது திருத்தம் சூட்சமமான முறையில் கொண்டு வரப்பட்டது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
மேலும், அரசியலமைப்பின் 19வது திருத்தம் நிறைவேற்று அதிகாரத்தை பலவீனப்படுத்தவே உருவாக்கப்பட்டது. முத்துறைக்கும் இடையில் அதிகார ரீதியில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றதால் கடந்த அரசாங்கத்தின் அரச நிர்வாகம் கேள்விக்குறியாக்கப்பட்டன. இதன் தாக்கம் இன்றும் தொடர்கிறது. 19வது திருத்தம் அனைத்து தரப்பினரின் விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது.
19வது திருத்தத்துடன் தொடர்ந்து அரச நிர்வாகத்தை முன்னெடுத்து செல்ல முடியாது. இதன் காரணமாகவே புதிய பாராளுமன்றத்தில் இந்த திருத்தத்தை நீக்கி நாட்டுக்கும், அரச நிர்வாகத்தக்கும் பொருந்தும் விதத்தில் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வர புதிய அரசாங்கத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவினை கோருகின்றோம்.
முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அரசியல் ரீதியில் இன்னும் பல விடயங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். கொழும்பு மாவட்டத்தில் பல அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என அவர் குறிப்பிட்டார். ஐக்கிய தேசிய கட்சியே பல தசாப்த காலமாக கொழும்பு மாவட்டத்தில் ஆட்சி புரிகிறது என்பதை அவர் மறந்துவிட்டார்.
கொவிட்- 19 வைரஸ் பரவலை வெற்றிக்கொண்டிருந்தாலும் தேசிய பொருளாதாரத்தை நாம் இன்னும் முன்னேற்றவில்லை. தேசிய வருமானத்தை ஈட்டித் தரும் மார்க்கங்கள் அனைத்தும் தற்போது தடைப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை, எரிபொருள் விலை ஆகியவற்றை எவ்வாறு குறைப்பது. ஆகவே எதிர் தரப்பினர் நிலைமையினை புரிந்துக்கொள்ள வேண்டும் என்றார்.