காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 25 சிவில் அமைப்புகள் இணைந்து கொழும்பில் இன்று (புதன்கிழமை) பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்தினர்.
காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களை விரைந்து வெளிப்படுத்தி, அவர்களது உறவினர்களுக்கு நீதியை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டது.
இதன்போது ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோருக்கான மகஜர்களும் கையளிக்கப்பட்டன.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்ட மகஜரை, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பெற்றுக்கொண்டார்.
அதன் பின்னர் ஜனாதிபதி செயலகத்திலும் பிரதமர் அலுவலகத்திலும் வெளிவிவகார அமைச்சிலும் மகஜர்கள் கையளிக்கப்பட்டன.
இறுதி யுத்தத்தின் போது படையினரிடம் கையளிக்கப்பட் நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு, வடக்கு கிழக்கின் ஐந்து மாவட்டங்களில் இரண்டு மாதங்களை கடந்து மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும், அரசாங்க தரப்பிலிருந்து இதுவரை எவ்வித தீர்க்கமான பதிலும் வழங்கப்படாத நிலையில், அரசாங்கம் உரிய பதிலை விரைந்து வழங்க வேண்டும் என்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தை விரைந்து செயற்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டு இந்த ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.