யாழ். பல்கலை மாணவர்கள் படுகொலை: 5 பொலிஸாரும் விளக்கமறியலில்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். சதீஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் வைத்து கடந்த ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி இரவு யாழ். பல்கலைக்கழக 3 ஆம் வருட கலைப்பீட மாணவர்களான விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் பொலிஸாரினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஐவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று குறித்த வழக்கு விசாரணையானது யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். சதீஸ்கரன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போதே பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் எஸ். சதீஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.