ஆற்ற வேண்டிய பணிகள் நிறையவே இருக்கின்றன: ஐ.நாவில் ஏற்றுக்கொண்டது ஸ்ரீலங்கா
மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து பணியாற்றி மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஆக்கபூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட ஸ்ரீலங்கா உறுதி பூண்டுள்ளதாக வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளதாகவும், எந்த நாட்டிலும் மனித உரிமைகள் தொடர்பான ஆவணமும் முழுமையானது இல்லை என பேரவை அறியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும் எந்தவொரு நாட்டிலும் மனித உரிமைகள் தொடர்பான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
”கடந்த காலத்தில் ஸ்ரீலங்காவில் மக்கள் மிகவும் சிரமமமான மற்றும் துயரமான காலகட்டத்தை சந்தித்துள்ளதாக குறிப்பிட்ட ஹர்ஷ டி சில்வா, ‘அவர்களின் துயர்துடைக்க நிறைய பணிகள் நடந்திருந்தாலும், இன்னும் ஆற்ற வேண்டிய பணிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் பொறுப்பான ஓர் அரசாங்கமாக இப் பணிகளை செய்து முடிப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக அனைத்து அறிக்கைகளையும் கவனமாக வாசித்து அறிந்துகொள்ள உள்ளதாகவும், அனைத்தையும் தெளிவாக ஆராய்ந்து, மக்களுக்கு நலன் பயக்கும் வகையில், பொருளாதார வளம் மிக்க நாடாகவும், தன்னிசையான மற்றும் மக்களின் உரிமைகளை பேணும் நாடாகவும் ஸ்ரீலங்கா உருவெடுக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்காவில் அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகளை காக்கவும் உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்த பிரதி வெளிவிவகார அமைச்சர், இதுகுறித்து அச்சப்படதேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.