வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பாக எழுத்துமூலமான அறிவிப்பினை வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இந்த மாதம் 10ஆம் திகதிக்குப் பின்னர் கிடைக்கும் இந்நிலையில் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 10 முதல் டிசம்பர் 8 ஆம் திகதிவரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் நேற்று வேட்பாளர்கள் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக அறிவிப்பினை வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரியதாக பெயர் குறிப்பிட விரும்பாத அரசியல் கட்சி பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தலுக்கு முன்னர் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களுக்கு முரணாக செயற்படும் வேட்பாளர்களின் பெயர்களை வெளியிடுவேன் என்றும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸவை நியமிக்குமாறு கோரி கட்சியின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனினும் கட்சியின் தலைவராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் ரணில், சஜித் என இரு அணிகள் பிளவுபட்டுள்ளன.
இவ்வாறான நிலை நீடிக்குமாயின் சஜித் தரப்பிலான அணி புதிய கூட்டணி ஒன்றை அமைப்பது குறித்து ஆலோசித்து வருவாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் ரணில் நாடு திருப்பியதும், சஜித் தொடர்பான நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் மாற்று நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.