Thursday , April 18 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / மயிலாடுதுறை அருகே தரையில் புதைந்து உள்வாங்கிய குடியிருப்பு வளாகம்

மயிலாடுதுறை அருகே தரையில் புதைந்து உள்வாங்கிய குடியிருப்பு வளாகம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள அகரகீரங்குடி பகுதியில் நஜிபுனிஷா என்பவருக்கு சொந்தமான 2 மாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இதில் 5 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இதே கட்டிடத்தில் மர இழைப்பகமும் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இந்த 2 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென குலுங்கியது. அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் 30-க்கும் மேற்பட்டோர் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏதோ பூகம்பம் வந்துவிட்டதோ? என்று மிரண்டுபோன அவர்கள் குழந்தைகளையும், உடைமைகளையும் தூக்கிக்கொண்டு பதறியடித்தப்படி வெளியே ஓடிவந்தனர்.

கட்டிடம் திடீரென குலுங்கியதால் சுமார் அரை அடிக்கு உள்வாங்கி இருந்தது. மேலும் பைசா கோபுரம் போல் ஒரு பக்கம் சற்று சாய்ந்த நிலையில் இருந்தது.

நல்லவேளையாக குடியிருப்பில் வசித்து வந்த அனைவரும் தப்பி ஓடி வந்ததால் உயிர்சேத அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டது. பின்னர் இந்த சம்பவம் பற்றி மயிலாடுதுறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே விரைந்து வந்த தீயணைப்பு நிலையத்தினர், குடியிருப்பில் இருந்த கியாஸ் சிலிண்டர்களை அப்புறப்படுத்தினர். மேலும் அங்கு வசித்து வந்தவர்களின் உடைமைகளையும் அப்புறப்படுத்தினர்.

இதையடுத்து வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மயிலாடுதுறை தாசில்தார் விஜயராகவன் மற்றும் அலுவலர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கட்டிடத்தின் உறுதி தன்மையை பற்றி ஆய்வு செய்தனர். அப்போது இந்த கட்டிடம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்புதான் கட்டப்பட்டது என்று தெரியவந்தது. மேலும் வயல்வெளியில் கட்டிடம் கட்டப்பட்டதாலும் சரியான அடிமட்டம் அமைக்காததாலும் கட்டிடம் உள்வாங்கியது தெரியவந்தது.

இதையடுத்து கட்டிடம் பாதுகாப்பு தன்மை இல்லாததால் உடனடியாக அதற்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். தொடர்ந்து இந்த கட்டிடம் கட்ட முறையாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா? என்று அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

மயிலாடுதுறை பகுதியில் 2 மாடி கட்டிடம் திடீரென உள்வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv